கோவை அருகே விவசாய குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானையை, வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை அருகே உள்ள மங்களப்பாளையம் கிராமத்தில் குமார் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் யானை கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் இன்று அதிகாலையில் தோட்டத்திலிருந்து வெளியேறி உள்ளது. எனினும் தோட்டத்திற்குள் யானை பிளிரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அங்கு சென்று பார்த்தபோது விவசாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த குட்டையில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.
மதுக்கரை வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமையிலான அருண்குமார் பாரஸ்ட் ரேஞ்சர், ஐயப்பன் வனவர் , செல்வராஜ் வனக்காப்பாளர் ராதாகிருஷ்ணன் வனக்காப்பாளர் ஆகிய வனத்துறையினர் அதிகாலை 4.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்து குட்டையில் சிக்கியிருந்த குட்டி யானையை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் அந்த குட்டி யானை விரட்டப்பட்டது.
நமது செய்தியாளர் வடிவேல்